தீக்குளிக்காத விட்டில்கள் -6
ராதா ஷில்லாங்கிற்குத் திரும்பவேண்டியிருந்தது.
ஷில்லாங்கிலே இரவுகள் நீளமாயிருந்தன. பள்ளிகொண்டாவை விட .பகல் அதைவிட நீளமாயிருந்தது. செய்வதற்கு ஒரு வேலையுமில்லை. சமைப்பதற்கு ஒரு குக், எடுபிடி வேலைகளுக்கு ஒரு ஆர்டர்லி. சிக்கன் சமைப்பதற்கு மட்டும் அவள் போவாள். அதைச் செய்..., இதைச் செய் என்று உத்தரவு கொடுப்பாள். பின் வேலையே இல்லாத நெடிய மௌனம்.
வந்த புதிதில் ஆபிஸர் மனைவிகள் சிலர் அவளைக் காண வந்தார்கள். அவளை வீட்டுக்கு அழைத்தார்கள்.
உத்யோகப் போட்டிகளின்... அந்தஸ்துப் பகட்டுகளின் மத்தியில் உழன்று பாசாங்கு செய்கிற சலிப்பூட்டுகின்ற மந்தமான உலகம். கற்பித்துக்கொண்ட விரோதங்களுக்காக ஒருத்திக்கு எதிராக இன்னோருத்தி கட்சி சேர்க்கும் உலகம் அது...
ஒருநாள் மிஸஸ். சின்ஹா ஸ்காட்ச்சை கிளாஸில் ஊற்றி நீட்டினாள். இன்னொரு நாள் மிஸஸ் பூனாச்சா சீட்டாடக் கூப்பிட்டாள். மேஜர் குரியாகோஸின் மனைவி ஒருபடி அதிகமாகப் போனாள். ஒரு சிகரெட்டை உருவி எடுத்து, தான் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு ராதாவுக்கு ஒன்றை நீட்டினாள்.
“ட்ரை திஸ்.”
“நோ தாங்க்யூ”
மிஸஸ் குரியாகோஸ் அவளை ஏளனமாகப் பார்த்தாள். அனேகமாக அவர்கள் எல்லார் மத்தியிலும் விமன்ஸ் லிபரேஷன் ஃபாஷனாக இருந்தது.
ஆனால் அதன் பின்னணியில் பெண்ணாகப் பிறந்துவிட்ட சாபத்தின் பளுவைச் சுமக்கிற துக்கம் சீற்றத்தின் மாறுவேஷம் போட்டிருந்தது.
ராதா தன் கூட்டுக்குள் பின்வாங்கினாள். 'அன்சோஷல்' என்றும் ‘கண்ட்ரிகூஸ் ’ என்றும் கிட்டும் பட்டங்களை விட சுயத்துவம் முக்கியமாக இருந்தது.
காப்டன் ஹயக்ரீவனுக்கு கான்ஃபரன்ஸ்கள், பார்ட்டிகள், பெரேடுகள் என்று நிறைய வேலை இருந்தது. ராதாவின் பகல்கள் நீளமாயின.
க்வார்ட்டர்ஸை அலங்கரிக்கத் தொடங்கினாள். ஒவ்வொரு பட்டாலியனிலிருந்து டிரான்ஸ்ஃபராகும் போதும் காப்டன் ஹயக்ரீவன் என்ற அவளது ஹரிக்குக் கிடைத்த ட்ராபிகள், அன்பளிப்புகள், துப்பாக்கிகள் தேய்க்கப்பட்டன..., துலங்கின..., பளபளத்தன. கர்ட்டன்கள் மாற்றப்பட்டன. ட்ராயிங் ரூமை அவளது சித்திர வேலைப்பாடுகள் அலங்கரித்தன. க்வார்ட்டர்ஸின் உள்ளமைப்பே முற்றிலும் மாறிற்று.
அப்போதும் பகலின் நீளம் குறையவில்லை.
“ஸ்ப்லெண்டிட்... மார்வலஸ்...” என்று பாராட்டுக்களைத் தாராளமாக அள்ளி வீசிவிட்டு, விஸ்கியில் மூழ்கி சீக்கிரமாக காப்டன் ஹரி தூங்கிப் போனார். இரவுகளில் அவள் விழித்திருந்தாள். ஹீட்டரும் விழித்திருந்தது.
அவள் தன்னை மறந்து உறங்கும் ஹரியிடம் ஓசையின்றித் தனக்குள் கேட்டுக்கொண்டாள்
'காப்டன் நீங்கள் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டீர்கள்? உங்கள் வாழ்வின் எந்தக் காலியிடத்தை நிரப்ப நான் அவசியப் பட்டேன்? உடம்பின் தேவையா... இல்லை..யூ டோன்ட் ரெலிஷ் செக்ஸ்... அது உங்களுக்கு ஒரு யாந்திரீகமான கடமை. என்னைக் குழந்தையாக நினைக்கிறீர்கள். குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கிற பெரிய மனிதன்போல உங்களைப் பாவித்துக் கொள்கிறீர்கள். அதற்காகத்தான் கல்யாணம் செய்துகொண்டீர்களா? உங்கள் சமூக அந்தஸ்துக்குப் பட்டதாரியாக ஒரு மனைவி வேண்டும். உங்கள் மனசுக்குக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்க குழந்தை மாதிரி ஒரு பெண் வேண்டும்.
அவள் உங்களை அதிகாரம் செய்யவேண்டும். அவளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்து அதில் ஒரு சுகம் காணவேண்டும். இதற்காகவா?
'நான் பிறர் விருப்பங்களை ஏந்தி நிற்கும் பாத்திரம்.
நான் என்றும் பாத்திரமாகவே இருக்கிறேன். செத்துக்கொண்டிருக்கும் வைதீகத்திற்கும் என் சுயபலி தேவைப்பட்டது. தேவைப்பட்டதா இல்லை, தேவைப்பட்டதாக நான் நினைத்து கொண்டேனா? என் குடும்பத்தின் நம்பிக்கைக்கு நான் பாத்திரமானேன். இப்போது காப்டனின் மனைவி என்ற சமூக மரியாதை.
‘பாத்திரமாகு... ராதா பாத்திரமாகு...!’
மனம் கண்ணனுக்குத்தாவியது
‘கண்ணா உன் நம்பிக்கைக்கு, தவிக்கின்ற உன் இதயத்தில் பிறந்த அவா ஒன்றிற்கு மட்டும் நான் பாத்திரமாகவில்லை. காதல், காமம், பிரேமை, பிரியம், யார் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அதை அழைத்துக் கொள்ளட்டும். அது ஒரு சத்தியம். அற்பாயுசானாலும், அது ஒரு சத்தியம்! இந்தப் பாவனை என்ற சவக்கிடங்குகளில் சமூக அந்தஸ்து என்ற பொய் முகங்களில் காணமுடியாத அக்னி சொரூபமான சத்தியம். ஆனால் நான் அதைப் புறக்கணித்து விட்டேன்.
அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. நீ எங்கே என்னைத் தேடி வந்துவிடுவாயோ என்று அவர் பயப்படுகிறார். கடைசி வரையும் நான் கிருஷ்ணமாச்சாரியின் மகளாயும், நரசிம்மாச்சாரியாரின் மகளாயும் வாழ்ந்து எனக்குள் பொசுங்கிப் பொசுங்கி பஸ்மீகரமாய் விடவேண்டும் என்று கூடார்த்தமாக விண்ணப்பிக்கிறார், கட்டளையிடுகிறார்.
கண்ணா நீ எங்கே... என்னைத் தேடி கல்கத்தா தாண்டி, பிரம்மபுத்திராவைக் கடந்து கௌஹாத்தி தாண்டி, வளைந்து வளைந்து ஓடி வயிற்றைப் புரட்டும் இந்த மலைப் பாதைகளில் ஏறி, காசி குன்றுகளைக் கடந்து என்னைத் தேடி வருவாயா? அறுந்த வேரைத் தேடிக் கொண்டு நீ வருவாயா?
வா... கண்ணா வா... என் பகல்கள் முடிவேயில்லாத தாபத்தோடு, வெறுமையோடு, சவத்துவத்தோடு சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன. என் இரவுகள் உன்மத்தம் பிடித்துப் போய் ஒரு மாற்றமுமில்லாத உற்சாகமற்ற இன்னொரு சூர்யோதத்திற்காக நீளுகின்றன.
வா... கண்ணா வா... இந்த நிர்விகார சூன்யத்திலிருந்து சில நிமிடங்களேனும் என்னை உயிர்ப்பிக்க வா...![தொடரும்]
நான் என்றும் பாத்திரமாகவே இருக்கிறேன். செத்துக்கொண்டிருக்கும் வைதீகத்திற்கும் என் சுயபலி தேவைப்பட்டது. தேவைப்பட்டதா இல்லை, தேவைப்பட்டதாக நான் நினைத்து கொண்டேனா?
ReplyDeleteஒவ்வொரு பெண்ணும் தன்னை காதாபாத்திரமாக மாற்றிக்கொள்ளும் வலிகளை சித்தரிக்கும் வரிகள்.
இந்தப் பாவனை என்ற சவக்கிடங்குகளில் சமூக அந்தஸ்து என்ற பொய் முகங்களில் காணமுடியாத அக்னி சொரூபமான சத்தியம். ஆனால் நான் அதைப் புறக்கணித்து விட்டேன். - பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் செய்கின்ற புறகணிப்பு.
கடைசி வரையும் நான் கிருஷ்ணமாச்சாரியின் மகளாயும், நரசிம்மாச்சாரியாரின் மகளாயும் வாழ்ந்து எனக்குள் பொசுங்கிப் பொசுங்கி பஸ்மீகரமாய் விடவேண்டும் என்று கூடார்த்தமாக விண்ணப்பிக்கிறார், கட்டளையிடுகிறார். - பெரும்பாலான பெற்றோரின் நிர்பந்த செயல்பாடுகள்....
காதாபாத்திரங்களை சித்தரிக்கிற ஒவ்வொரு வரிகளும் கதாபாத்திரங்களின் உணர்வான முன் நிர்க்கின்றன. முந்தைய அத்தியாயங்களை விட இந்த அத்தியாயம் சிறப்பு.