தீக்குளிக்காத விட்டில்கள்.14
[இந்தப்பதிவுடன் தீக்குளிக்காத விட்டில்கள் நாவல் முற்றுப்பெறுகிறது]
கே.ஆர்.எஸ். வண்டி திரும்பி செல்வாம்பாள் பார்க்கை நெருங்கும்போது அவர்கள் இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.
"இங்கேயே ஆட்டோ கிடைக்கும் இல்லேன்னா அநாவசியமா பஸ் ஸ்டாண்ட வரைக்கும் போய் ஆட்டோ பிடிச்சிட்டு வரணும். நிச்சயமா 14ஆம் நம்பர் பஸ் கிடைக்காது” என்று கண்ணன்தான் யோசனை கூறினான்.
அவர்கள் இருவரையும் இறக்கிய பஸ் புறப்பட்டுப் போய்விட்டது. அருகில் எங்கும் ஆட்டோ வருவதாகத் தெரியவில்லை.
"மணி என்ன ஆகியிருக்கும்...?” என்று கேட்டாள் ராதா.
"மணி ஒன்பதரை இருக்கும்...” என்று பதிலளித்தான் கண்ணன்.
"பத்து மணிக்குள்ளே ஹாஸ்டலுக்குப் போயிடுவோம் இல்லே...?”
"தாராளமாய்ப் போயிடலாம். ஏன் வாட்ச்மேன் கதவைப் பூட்டிடுவானோ...?”
"எல்லோரும் ஊருக்குப் போயிண்டிருப்பாங்க. அதனாலே இன்னிக்கு ஒன்னும் அவ்வளவு கட்டுப்பாடு இருக்காது. ஆனாலும் பத்து மணிக்குள்ளே போயிடனும்.”
அவர்கள் ஜன நடமாட்டம் குறைந்த அந்தச் சாலையின் வழியாகச் சற்று வேகமாக நடந்தார்கள்.
"கங்கோத்ரி கேட் வழியாக யூனிவர்சிட்டி காண்டீனை கட் பண்ணிட்டுப் போயிடுவோம்...”
"சரி...”
அவர்கள் ஹாஸ்டலுக்குப் போவதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்போல வேகமாக நடந்து வந்தார்கள். கங்கோத்ரி கேட்டினுள் பிரவேசித்து இன்ஸ்டிடியூட் ஆப் கரெஸ்பாண்டென்ட் கோர்ஸ் வழியாக நடந்தபோது, நிலா வானத்தில் பளிச்சென்று பிரகாசித்தது.
விழுதுகள் அடர்ந்த அந்த ஆலமரத்தருகே வந்ததும் ராதா சற்று நின்றாள்.
"ஏன் ராதா...?” என்று கேட்டான் கண்ணன்.
"இந்த நிலா நம்ம பள்ளிகொண்டா ஆற்றிலே ஒரு சமயம் பிரகாசிக்கறப்போ நாம தனியா பேசிக்கிட்டிருந்தோமே, அது உனக்கு நினைவிருக்கா...?”
"இருக்கு...”
ஜன நடமாட்டமேயில்லாத அந்தச் சாலையில் ஆலமரத்தின் இலைகள் மெதுவாகச் சரசரப்பதைத் தவிர வேறு ஒலிகளற்ற அந்தச் சூழ்நிலையில், அவள் தன் வசமிழந்ததுபோல் தென்பட்டாள்.
"கண்ணன்...” என்று உணர்ச்சிவசப்பட்டவளாய் ஓரடி முன்னே வைத்து அவன் மார்பிலே முகத்தைப் புதைத்து அந்த மார்பில் அவளுக்குரிய எதையோ தேடித் துழாவுவதுபோல் முகத்தை இடமும் வலமுமாகத் தேய்த்துக் கொண்டே விம்மியழத் தொடங்கினாள்.
கண்ணீரின் சூடும் அவளது உதடுகளின் ஈரமும் ஒருங்கே பட்டு அவன் உடல் சிலிர்த்தது.
"ராதா... என்ன இது...?”
"கண்ணன்.... ஆ....ஆ....ஆ....ஆ” அவள் வாய்விட்டுக் கத்திவிட்டாள்.
கண்ணன், அந்தக் குரலின் முறையீட்டில் தாக்குண்டு போய் ஓர் அனிச்சை செயல்போல் அவள் முதுகைத் தன் கரங்களால் சிறையிட்டுத் தன் மார்பினோடு இறுக ஐக்கியப்படுத்திக் கொண்டான். அவளது ஈரமான கண் இமைகளும் கன்னங்களும் அவன் முகத்திலே புதைந்து துடித்து நகர்ந்தன.
ராதாவின் உதடுகள் அவன் உதட்டைச் சந்தித்தபோது கண்ணன் தணித்துத் தணித்தும் அவற்றின் தணியாத தாகத்தை உணர்ந்தான்.
"போதும்... ராதா... நம்மை நாமே நாசமாக்கிக்க வேண்டாம்...”
"நான் நாசமாகணும்... இதுவரையிலும் நான் நாசமாகல்லே... இப்போ நான் நாசமாகியே தீரணும்...”
ராதாவின் உதடுகள் கண்ணனின் கழுத்திலும் தோளிலும் மோவாயிலும் கன்னங்களிலும் உதடுகளிலும் அவளை நாசமாக்க வேண்டிய அக்னியைத் தேடுவதுபோல் சஞ்சரித்தன.
கண்ணன் கற்சிலைபோல் எந்த உணர்ச்சி அபவாதங்களுக்கும் இடமற்ற மரக்கட்டைப்போல் வெறுமையாய் நின்றான்.
"கண்ணன்...” அவள் குரல் கேவிற்று.
"ராதா... ப்ளீஸ்... ப்ளீஸ்... பீ சென்சிபிள்...”
"ஐ டோண்ட் வாண்ட் எனி சென்ஸ்...” அவள் உருகி வழிந்து கொண்டிருந்தாள்.
"பட்... ஐ வாண்ட்..ஐ நீட் சென்ஸ்” என்று சீறுகின்ற குரலில் கண்ணன் சொன்னான்.
கண்ணனின் முதுகின்மீது கொடிபோல் படர்ந்திருந்த அவளது கைகள் விலகின.
"ராதா நாசமாயிடறது ரொம்ப சுலபம். நாசமாக்கிடறதும் என் நிலைமையில் இருக்கிற ஒரு ஆம்பிளைக்கு ரொம்ப ரொம்ப சுலபம்...ஜஸ்ட் ஒன் மினிட்...! அதுபோம் நாம நாசமாயிட...”
......................
"ஆனா... இதுலே ஒரு புன்மை தெரியுதே, அது உனக்குப் புரியலே...? ராதா, நீ டிசிப்ளின் கிருஷ்ணமாச்சாரி மகள். வைதீகமான கிருஷ்ணமாச்சாரியார் மகள். அந்தப் பரிதாபமான காப்டன் ஹயக்ரீவனுக்கு மனைவி. நோ... நோ... நோ... எனக்குச் சொந்தமாக்கி இருக்கவேண்டிய சொத்தை எங்கிருந்தோ திருடித்தான் எடுக்கணுமா? எடுக்கணும்னா அது எவ்வளவு கேவலம்? நோ... நோ...”
நிலா மௌனமாகக் காய்ந்தது. ஆலமரத்தின் இலைகளினூடே காற்றின் பெருமூச்சு தெளிவாகக் கேட்டது.
"மனக்கட்டுப்பாட்டை அந்த சொற்ப கால நக்சல் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்டேன். ராதா! நீ என்ன வேணும்னாலும் பண்ணு.யாரா வேணும்னாலும் இரு. சந்தர்ப்பம் கிடைச்சா சேத்திலே விழற பன்றி ஆயிடாதே. எரிகிற தீயிலே விழுந்து கருகிற பூச்சி ஆயிடாதே. இதைத்தான் அந்த சொற்பகால வாழ்க்கையிலே நான் கத்துக்கிட்டேன்."
ராதா கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விழுந்ததுபோல ஸ்தம்பித்து நின்றாள். அந்த ஒரு கணத்தில் அவன் எட்டமுடியாத சிகரத்திற்கு உயர்ந்து விட்டதைப் போலவும், தான் ஓர் உயரத்திலிருந்து வீழ்ந்து குன்றிக் குறுகிப் புழுவாகச் சிலிர்த்து நெளிவதைப் போலவும் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்.
தூரத்தில் எங்கோ ரோந்து சுற்றும் கூர்க்கா விசில் ஊதும் ஓசை கேட்டது. அந்த எச்சரிக்கையில் அவளுக்கு ஏதோ செய்தி இருந்தது.
'ராதா... ராதா... நீ என்றும் ஒரு பாத்திரம், என்றென்றும் .. பாத்திரமாக மட்டுமே இருக்க வேண்டியவள். ஒன்றைத் தேர்ந்தெடுத்து விட்டு இன்னொன்றிற்கு மாறாதே...!'
அவர்கள் இருவரும் அந்தச் சாலையில் அசைவின்றி நின்றனர்.
எதிரில் ஒரு சிமெண்ட் பெஞ்ச் தெரிந்தது.
" அங்கே உட்கார்ந்து பேசுவோமா?" கண்ணன் கேட்டான்.
அவள் பேசாமல் சிமெண்ட் பெஞ்சை நோக்கி நடந்தாள். அவள் பக்கத்தில் நிறைய இடம் விட்டுத் தள்ளி கண்ணன் உட்கார்ந்தான்.
நிலா வெளிச்சத்தில் அவள் முகம் சுருங்கித் துடிப்பதை யோசனையோடு பார்த்துக்கொண்டே, கனமான உணர்ச்சிகள் தாக்கிய குரலில் கண்ணன் சொன்னான்.
" நான் கூப்பிட்டப்போ நீ என்னோட வராமே போனது என் வாழ்க்கை வேற எதுக்கோன்னு நினைக்க வைச்சது. அதைத் தேடி எங்கெங்கேயோ சுத்தி ஒரே ஒரு சின்ன விஷயம் தான் கத்துக்கிட்டேன். இரையாகிறவன், உருவாக முடியாது. உருவாக்கவும் முடியாது. முக்கியமான பலம் ஒண்ணு அவன்கிட்டேயிருந்து போயிடுது. ஆத்ம பலம்."
ராதா கற்சிலை போல் உட்கார்ந்திருந்தாள். எங்கோ தூரத்தில் பார்த்தபடி.
" ஜஸ்ட் நாம்ப என்ன உருவாக்கறோமோ இலையோ, நம்மைப் பாழாக்கிக்க வேண்டாம். இல்லை.. எனக்கு நீ தான் வேணும். உன்னைத்தவிர வேற எதுவும் வேணாம்னு நினைக்கிறியா? சொல்லு.இப்போகூட மூணு வருஷத்துக்கு முன்னாடி பள்ளிகொண்டாவிலே உங்கிட்ட சொன்னதையே நான் திருப்பிச் சொல்றேன். என்கூட புறப்பட நீ தயாரா? அப்படீன்னா சொல்லு, இதோ இந்தப் பெஞ்சி மேலே உட்கார்ந்து, அவ்வளவு பெரிய உடம்பிலே ஒரு சின்ன மனசை வச்சுக்கிட்டு, ‘என் ராதா ஒருத்திதான் எனக்கிருக்கிற ஒரே ஆதரவு’ ன்னு அந்தக் காப்டன் சொன்னாரே, அதையும் தூக்கியெறிந்து போட்டுவிட்டு உன்னை அழச்சிக்கிட்டுப் போறேன். நீ வரத் தயாரா ராதா...?” நிலவிலே தீர்க்கமாக ஜொலிக்கின்ற முகத்தோடு கேட்டான் கண்ணன்.
ராதா ஒரு பதிலுமின்றி உட்கார்ந்திருந்தாள் .
"இப்பவே சொல்லணும்கூட இல்லே... நாளைக்குக் காலையிலே சொல்லு. எதைச் செய்தாலும் தெரிஞ்சி பூரணமா அதற்குச் சம்மதித்து சுத்தமா பிசிறு இல்லாம அறுத்திட்டுச் செய்யணும். அப்புறமா அதைப் பத்தி வருத்தப்படவே கூடாது. யாரையோ ஏமாத்திட்டு ஒரு பொய் வேஷம் போட்டுக்கக்கூடாது. அப்புறமா நாமே நமக்கு ரொம்ப ஃபில்தியா ..சாக்கடையாப் போயிடுவோம்.”
ராதாவுக்கு ஆர்டலியையும், மிஸஸ் மல்ஹோத்ராவையும் இணைத்து ஷில்லாங்கிலே பேசப்பட்ட கதைகள் நினைவுக்கு வந்தன. அதைக் கேட்டபோத தன் உடம்பிலே ஏற்பட்ட அருவருப்பு நினைவு வந்தது.
அடுத்த நாள் மைசூர் பஸ் ஸ்டாண்டில் மாலை ஏழரை மணிக்குப் புறப்படும் சென்னை பஸ் நின்று கொண்டிருந்தது. பஸ்ஸுக்குப் பின்புறம் இருந்த டிக்கியில் ராதாவின் பெட்டியை வைத்துவிட்டு கண்டக்டரிடம் வந்தான் கண்ணன்.
"இவங்க பள்ளிகொண்டாவிலே இறங்குவாங்க. அப்போ இந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடுத்துக் கொடுத்திடுங்க” என்று வினயமாகச் சொன்னன் கண்ணன்.
"பள்ளிகொண்டாவில் ஸ்டாப்பிங்கே இல்லே...பேசஞ்சருங்கிட்ட இதே பெரிய தகராறு... அவசரத்துக்கு வந்து ஏறிடுவாங்க. நம்ம சந்தர்ப்பத்திற்கு ஏதாவது பண்ணிட்டம்னா டிக்ஷனரியைப் பக்கத்துலே வச்சிட்டுப் பெட்டிஷனை எழுத உட்கார்ந்துடுவாங்க” என்று அலுத்துக் கொண்டே சொன்னார் அந்த கண்டக்டர்.
கண்ணனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
"நீங்க எங்கே நிறுத்தினாலும் ஒரு பஸ் கனெக்ஷன் கிடைக்கறாப்பிலே நிறுத்துங்க கவலைப்படாதீங்க. இந்த அம்மா பெட்டிஷன்லாம் எழுத மாட்டாங்க” என்று அவருக்குத் தைரியம் ஊட்டி விட்டு ராதாவை பஸ்ஸில் ஏறச் சொன்னான்.
"பஸ் புறப்பட இன்னும் நேரமிருக்கு” என்று ராதா வெளியில் வந்து நின்றாள்.
"அப்புறம்...”
"அப்புறமா... என்ன இருக்கு? நான் பள்ளிகொண்டாவிற்குப் போய்ட்டு ஒரு கால் கொடுப்பேன். அவர் ஷில்லாங்கிலிருந்து வந்து கூட்டிண்டு போவார்.”
கண்ணன் அவளைப் பார்த்து புன்முறுவல் செய்தான்.
'அந்தப் புன்முறுவல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று ராதா அதை ரசித்தாள்.
"மறுபடியும் உன்னை பார்க்க முடியுமா கண்ணன்...?”
"ஏன் முடியாது?. போலீஸ் ரெகார்டிலேயிருந்து என் பேரை எடுத்திட்டா நான் பள்ளிகொண்டாவுக்கு வந்து தானே ஆகணும்...”
"அவருக்கு லீவு கிடைச்சி நான் வரும்போது நீ அங்கே இருக்கணும். இது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்கப் போவுதா...?”
"பார்க்கணுமா என்ன...? நினைப்பு இருந்தா போதுமே...”
"அதுவும் சரிதான்...”
"படிச்சது போதும்னு தோணுது. படிச்ச வரைக்கும், கத்துக்கிட்ட வரைக்கும் உருப்படியா நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தா அது நாம் படிக்கறதைவிடத் திருப்தியாய் இருக்கும்.”
டிரைவர் கதவை அறைந்து சாத்திக்கொண்டு பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார்.
"ஏறுங்க சார்... ஏறுங்க... ஏறுங்க...” கண்டக்டர் கட்டளையிட்டார்.
"விஷ் யூ பெஸ்ட் ஆப் ஆல்...”
"தாங்க் யூ...! விஷ் யூ த ஸேம்...”
ராதா பஸ்ஸிற்குள் ஏறி உட்கார்ந்தாள்.
(முற்றும்)